முழுஊரடங்கால், ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை-காவிரிக்கரையோரம் ஆடிப்பெருக்கு கொண்டாட தடை


முழுஊரடங்கால், ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை-காவிரிக்கரையோரம் ஆடிப்பெருக்கு கொண்டாட தடை
x
தினத்தந்தி 2 Aug 2020 6:15 AM GMT (Updated: 2 Aug 2020 6:12 AM GMT)

முழுஊரடங்கால் பவானி கூடுதுறை உள்பட காவிரிக்கரையோரம் ஆடிப்பெருக்கு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு, 

ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரியில் புது வெள்ளம் பாய்ந்து வரும் காலமாக ஆடி மாதம் உள்ளது. கரைகளை தொட்டு பாய்ந்து வரும் காவிரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விவசாயம் செய்து வாழ்வினை செழிக்க வைக்கும் வகையில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழாவை தொன்று தொட்டு கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். ஆடிப்பெருக்கின்போது காவிரியில் நீராடி காவிரிக்கரையில் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி காவிரி பாயும் பகுதிகள் தோறும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி நதிகளுடன் கண்ணுக்கு புலப்படாத அமுதநதியும் சங்கமமாகும் இடமாக பவானி கூடுதுறை காணப்படுகிறது. அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து புனித நீராடுவது வழக்கம். புதுமண தம்பதிகள் வந்து தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு காவிரித்தாயை வணங்குவார்கள். இதேபோல் கன்னிமார் பூஜையும் நடைபெறும்.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வு இல்லா முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பொதுமக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவிரிக்கரையோரத்தில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஆற்றின் கரையோர பகுதிகளில் குறிப்பாக பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடி ஆகிய பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று ஈரோடு மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கம். குறிப்பாக பெண்கள், புதுமண தம்பதிகள் கூடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி மகிழ்வார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரே இடத்தில் அதிகஅளவில் மக்கள் கூடுவதால், நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி 2-ந் தேதி (அதாவது இன்று) ஆடிப்பெருக்கையொட்டி பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே தடை உத்தரவை மீறி யாரேனும் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

அம்மாபேட்டை, சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, கோனேரிப்பட்டி, காடப்பநல்லூர், கேசரிமங்கலம் பகுதியில் உள்ள காவிரிக்கரையில் பொதுமக்கள் கூடவேண்டாம் என வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அம்மாபேட்டை காவிரிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ஈரோடு காவிரிக்கரையிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அங்கு சோழீஸ்வரர் கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story