ஸ்ரீபெரும்புதூர் அருகே தீயில் கருகி பெண் பலி சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார்


ஸ்ரீபெரும்புதூர் அருகே தீயில் கருகி பெண் பலி சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார்
x
தினத்தந்தி 3 Aug 2020 1:26 AM GMT (Updated: 3 Aug 2020 1:26 AM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் செய்தார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பால்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். இவரது மகள் திவ்யபாரதி (வயது 24). இவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சேட்டு (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

திவ்யபாரதி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திவ்யபாரதியை அவரது தாய் வீட்டில் இருந்து பணம், நகை வாங்கி வரும்படி கேட்டு அவரது கணவர் சேட்டு அவரை அடித்து, துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திவ்யபாரதிக்கும், சேட்டுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது திவ்யபாரதி, தனது உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திவ்யபாரதி பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் திவ்யபாரதியின் தாய் நாகம்மாள், ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், என்னுடைய மகளை பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்தி கொன்று விட்டனர். எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story