டி.வி. சேனல் மாற்றுவதில் தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


டி.வி. சேனல் மாற்றுவதில் தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2020 8:03 PM GMT (Updated: 4 Aug 2020 8:03 PM GMT)

டி.வி.யில் சேனல் மாற்றுவதில் தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

காலாப்பட்டு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவர் புதுவை மாநிலம் சேதராப்பட்டு சரஸ்வதி நகரில் கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யசுதா. இவர்களுடைய மகள்கள் கவுசிகா (வயது 14), ஆசிகா (12). இதில் மூத்தமகள் கவுசிகா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று 9-ம் வகுப்பு செல்ல தயாராக இருந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கவுசிகாவுக்கும், தங்கை ஆசிகாவுக்கும் டி.வி.யில் சேனல் மாற்றுவது தொடர்பாக சண்டை ஏற்பட்டது. அப்போது தாயார் சத்யசுதா, தங்கையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுமாறு கவுசிகாவை கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவள், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.

தூக்கில் தொங்கினாள்

நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த செபஸ்டின், சத்யசுதா ஆகியோர் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கவுசிகா தொங்கினார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகளை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவுசிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு செபஸ்டின் மற்றும் அவருடைய மனைவி கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

தங்கை பிறந்தநாள்

இது குறித்து சேதராப்பட்டு போலீசில் செபஸ்டின் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். நேற்று தங்கையின் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் முதல்நாள் அக்காள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story