மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிப்பு: ரூ.1¾ லட்சத்துக்கு அடமானம் வைத்த வாலிபர் கைது


மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிப்பு: ரூ.1¾ லட்சத்துக்கு அடமானம் வைத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2020 1:29 AM GMT (Updated: 5 Aug 2020 1:29 AM GMT)

ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியிடம் பறித்த 8 பவுன் தாலி சங்கிலியை வங்கியில் அடமானம் வைத்த வாலிபர் கைதானார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ். இவரது மனைவி ஜெபசுந்தரி (வயது 65). இவர், அதே பகுதியில் விறகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த 29-ந்தேதி இரவு இவர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர், அவர் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டார்.

இது குறித்து ஜெபசுந்தரி பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வங்கியில் அடமானம்

அதில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை காலனியை சேர்ந்த விக்னேஷ் (20) என்ற வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர், ஜெபசுந்தரியிடம் பறித்த தாலி சங்கிலியை சீதஞ்சேரியில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பெற்றது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் வங்கிக்கு சென்று தங்க சங்கிலியை மீட்டு மூதாட்டியிடம் ஓப்படைத்தனர். கைதான விக்னேசை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story