வேலூர் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா


வேலூர் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா
x
தினத்தந்தி 5 Aug 2020 2:23 AM GMT (Updated: 5 Aug 2020 2:23 AM GMT)

காதலனுடன் உல்லாசமாக இருந்து கர்ப்பிணியான இளம்பெண், தன்னை அவருடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தனது பெற்றோருடன் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மகமதுபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகள் சினேகா (வயது 19). பிளஸ்-1 வரை படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். சினேகாவும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய அத்தை மகன் சுதனும் (24) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சுதன் சென்னையில் தங்கி திரைப்படங்களுக்கு பின்னணி இசை சேர்க்கும் பிரிவில் சவுண்டு என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சுதன் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து படம் தயாரிப்பதாகவும், அதில் கதாநாயகனின் தங்கையாக நடிக்க வைப்பதாகக் கூறி, இளம்பெண் சினேகாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சினேகாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி சுதன் உல்லாசமாக இருந்தாகவும், இதனால் சினேகா கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம் முன்பு தர்ணா

இதுகுறித்து சுதனிடம் தெரிவித்த சினேகா தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், திருமணம் செய்வதாகக் கூறி காலம் கடத்தி வந்தார். தான் கர்ப்பமாக இருப்பது பெற்றோர், குடும்பத்தினருக்கு தெரிந்து விடுமோ எனப் பயந்த அவர் உடனடியாக திருமணம் செய்யும்படி அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதன் திருமணம் செய்ய மறுத்ததுடன், உன் கர்ப்பத்துக்கு நான் காரணம் அல்ல, என்னை வந்து தொந்தரவு செய்யாதே எனச் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சினேகா வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்துள்ளார். ஆனால் சுதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் விரக்தி அடைந்த சினேகா தனது பெற்றோருடன் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

4 நாட்களுக்குள்...

இதையடுத்து அவர்களை போலீசார் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சினேகா தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். போலீசார் செல்போனில் சென்னையில் இருக்கும் சுதனை தொடர்பு கொண்டு பேசினர். இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக 4 நாட்களுக்குள் போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் எனத் தெரிவித்தனர். அவரும் வேலூர் வருவதாகக் கூறினார். அதைத்தொடர்ந்து சினேகா, அவரின் பெற்றோர், குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story