ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சிக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சிக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 Aug 2020 12:18 AM GMT (Updated: 7 Aug 2020 12:18 AM GMT)

ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சிக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற 100 பழங்குடியின மாணவ -மாணவிகள் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயப்படிப்பில் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் பட்டயப்படிப்பை முடித்தபின், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்த்து, அந்த தேர்வில் வெற்றி பெறும் பழங்குடியின இடைநிலை ஆசிரியர்கள் தரவரிசை அடிப்படையில், அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ் 100 மாணவர்கள் கல்வியியல் பட்டயப்படிப்பு படிப்பதற்கு கல்விக்கட்டணம், புத்தகம், விடுதி, சீருடை கட்டணம், இதர செலவினங்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் ஏற்படும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 2019 -20 -ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தொகுப்பு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ள பழங்குடியின மாணவ -மாணவிகள் தங்கள் விருப்ப கடிதங்களை வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், தனி வட்டாட்சியர் (ஆதி திராவிட நலம்) அலுவலக வளாகம், ராணிப்பேட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த தகவல் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Next Story