இலங்கை தாதா அங்கொடா லொக்கா மரணம்: பெண் வக்கீல்-பெற்றோர், கணவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


இலங்கை தாதா அங்கொடா லொக்கா மரணம்: பெண் வக்கீல்-பெற்றோர், கணவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Aug 2020 5:24 AM GMT (Updated: 8 Aug 2020 5:24 AM GMT)

இலங்கை தாதா அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக மதுரையில் பெண் வக்கீல், அவரது பெற்றோர், முன்னாள் கணவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

மதுரை, 

இலங்கையின் நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் தமிழகத்தில் பதுங்கி தனது குடியுரிமையை மறைத்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரதீப்சிங் என்ற பெயரில் மதுரையில் வசிப்பதாக போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் கோவையில் மர்மமாக இறந்த அவரது உடலை மதுரை கொண்டு வந்து இங்குள்ள மின் மயானத்தில் தகனம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் அங்கொடா லொக்காவின் காதலி அம்மானிதான்ஷி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு ஐ.ஜி. சங்கர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் மதுரை வந்து கூடல்நகர் ரெயில்நகர் பகுதியில் உள்ள வக்கீல் சிவகாமி சுந்தரி தங்கி இருந்த வீடுகள், அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு சிவகாமி சுந்தரி உள்ளிட்ட 4 பேரின் பாஸ்போர்ட்டுகளை அவர்கள் கைப்பற்றினார்கள்.

அது தவிர இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பண நோட்டுகள், வங்கி புத்தகம் என 60 வகையான ஆவணங்களையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்துசி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகாமி சுந்தரியின் பெற்றோர், அவரது முன்னாள் கணவர், தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்தனர்.

மேலும் சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒருவரிடம் ரேஷன் கார்டை வாங்கி அந்த விலாசம் மூலம் பிரதீப்சிங் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்ததும், அதனை அந்த பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் உருவாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிவகாமி சுந்தரி வைத்திருந்த கார் பதிவு எண்ணை சி.பி.சி.ஐ.டி.யினர் ஆய்வு செய்தபோது, அது ஒரு மோட்டார் சைக்கிளின் பதிவுஎண் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே தமுக்கம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சிவகாமி சுந்தரியின் பெற்றோர் தினகரன், பாண்டியம்மாள், அவரது சகோதரர் அசோக், முன்னாள் கணவர் வினோத் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகினர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அலுவலகத்திற்கு வந்த சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, நான் விடுதலை புலிகளின் ஆதரவாளர். எனவே என்னை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர் என்று தெரிவித்தார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த சிவகாமி சுந்தரியின் கணவர் வினோத் நிருபர்களிடம் கூறுகையில், “நானும், சிவகாமி சுந்தரியும் ஒன்றாக படிக்கும் போது காதலித்து கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். அவரது தந்தை தினகரன் விடுதலை புலிகளின் ஆதரவாளர் என தெரியவந்ததால் நான் அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு கூறினேன். அவருடன் நான் சுமார் 5 ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தி உள்ளேன்.

கடந்த 2018-ல் நாங்கள் முறைப்படி விவாகரத்து பெற்றோம். எங்களுக்கு பிறந்த பெண் குழந்தையும் அவரிடம் தான் உள்ளது. அவரது நடவடிக்கை குறித்து கேட்டதால் அவர் என்னை கொல்ல முயன்றார். இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் வழக்கு உள்ளது. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று கூறினேன். அவர்களும் என்னிடம் விசாரணை நடத்திவிட்டு தேவைப்படும்போது அழைப்பதாக தெரிவித்தனர்” என்றார்.

சிவகாமி சுந்தரி கடந்த 6 மாதத்தில் அந்த பகுதியில் பல்வேறு வீடுகளுக்கு மாறி உள்ளார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவகாமி சுந்தரி தங்கியிருந்த ஒரு வீட்டில் தான் அங்கொடோ லொக்கா, அவரது காதலி உள்ளிட்ட 3 பேர் தங்கியிருந்ததாகவும், அவரது அலுவலகத்தில் மேலும் 3 பேர் தங்கியிருந்தது குறித்தும், அப்போது அவர்களின் நடவடிக்கை குறித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அங்கொடா லொக்கா வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அங்கொடா லொக்காவின் காதலி அம்மானிதான்ஷி வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும், பாதுகாப்பு காரணத்தாலும் கோவை மத்திய சிறையில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் சென்னையில் உள்ள புழல் சிறைக்கு நேற்று முன்தினம் திடீரென மாற்றப்பட்டார்.


Next Story