பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு வடமாநில தொழிலாளர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு வடமாநில தொழிலாளர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2020 10:15 PM GMT (Updated: 11 Aug 2020 12:48 AM GMT)

பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு வடமாநில தொழிலாளர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொன்மலை,

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் வடமாநில தொழிலாளர்கள் பணி நியமனத்தை கண்டித்து நேற்று பொன்மலை பகுதி தி.மு.க.சார்பில் ரெயில்வே பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் முன்னிலை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வேலை செய்கிறார்கள். இந்த பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பேச இருக்கிறார்கள் என்றார். 

ஆர்ப்பாட்டம் முடிவில் பொன்மலை ரெயில்வே பணிமனை மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோரிடம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பணிமனையில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து சுமார் 10 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள் சுமார் 40 பேர், எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு கொடுத்தனர்.

தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி பணிமனை முன் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரெயில்வே பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story