வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு மரியாதை


வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு மரியாதை
x
தினத்தந்தி 20 Aug 2020 10:00 PM GMT (Updated: 20 Aug 2020 6:33 PM GMT)

வல்லநாடு அருகே வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி,

வல்லநாடு அருகே மணக்கரை மலையடிவாரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி துரைமுத்துவை தனிப்படை போலீசார் பிடிக்க சென்றபோது, துரைமுத்து நாட்டு வெடிகுண்டு வீசியதில், போலீஸ்காரர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசார் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், போலீஸ்காரர் சுப்பிரமணியன் இறப்பு, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், போலீஸ் துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவர் நினைத்திருந்தால் தப்பியோடிய ரவுடியை பிடிக்காமல் விட்டு விட்டு, உயிர் தப்பி இருக்கலாம். ஆனால் அவர் கடமைதான் முக்கியம் என்று கருதி, தனது உயிரையும், குடும்பத்தையும் பொருட்படுத்தாமல், ரவுடியை பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட தாக்குதலில் வீர மரணம் அடைந்து உள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் இரங்கலை சமர்ப்பிக்கின்றோம் என்று கூறினார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், இளங்கோவன், பழனி, இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜாகீர் உசேன், அன்னபூரணி, கஸ்தூரி மற்றும் போலீசார் கலந்து கொண்டு சுப்பிரமணியன் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story