நெல்லை அருகே மாடுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது


நெல்லை அருகே மாடுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2020 9:30 PM GMT (Updated: 20 Aug 2020 7:35 PM GMT)

நெல்லை அருகே அனுமதியின்றி எருமை மாடுகளை ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை,

கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு ராட்சத லாரி நேற்று முன்தினம் இரவு நெல்லையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. நெல்லை அருகே கங்கைகொண்டான் சோதனை சாவடி வந்தபோது அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அந்த லாரியை போலீசார் திறந்து பார்த்தபோது 30 எருமை மாடுகள் இருந்தன.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த லாரியின் டிரைவர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த மணி (வயது 36) என்பது தெரியவந்தது. அவர் முறையாக அனுமதி பெறாமல் திருச்சியில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணியை போலீசார் கைது செய்தனர். அந்த ராட்சத லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

லாரியில் இருந்த 30 மாடுகளை போலீசார் மீட்டு நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் ஒப்படைத்தனர்.

Next Story