காதலன் வீட்டு முன்பு தற்கொலை செய்ய பெட்ரோல் பாட்டிலுடன் சென்ற பட்டதாரி பெண்


காதலன் வீட்டு முன்பு தற்கொலை செய்ய பெட்ரோல் பாட்டிலுடன் சென்ற பட்டதாரி பெண்
x
தினத்தந்தி 21 Aug 2020 12:13 AM GMT (Updated: 21 Aug 2020 12:13 AM GMT)

காதலன் வீட்டு முன்பு தற்கொலை செய்வதற்காக பெட்ரோல் பாட்டிலுடன் சென்ற பட்டதாரி பெண்ணை மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருவாரூர் ரோட்டில் உள்ள வேங்கைபுரம் சாலையை இளம் பெண் ஒருவர் அழுதுகொண்டே கடந்து சென்றார். அவரது கையில் பெட்ரோல் பாட்டில் இருந்தது. அப்போது அந்த வழியாக மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவி வனிதா தனது கணவர் அருள்ராஜனுடன் வந்தார்.

கணவன்-மனைவி இருவரும் அழுது கொண்டே சென்ற அந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி ஏன் அழுதுகொண்டே செல்கிறாய்? என அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதற்கு அந்த பெண், தனது பெயர் பவித்ரா என்றும், தனது சொந்த ஊர் வாஞ்சியூர் கிராமம் என்றும் தெரிவித்தார். தான் ஒரு முதுநிலை வணிகவியல் பட்டதாரி என்றும், நாலாநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை தான் காதலித்தாகவும், தன்னை கடந்த ஒரு வருடங்களாக காதலித்த அந்த இளைஞர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறினார்.

காதலன் வீட்டு முன்பு தற்கொலைக்கு...

மேலும் அவர் கூறும்போது, தங்கள் காதல் விவகாரம் தனது வீட்டிற்கு தெரிய வந்ததால் தனது குடும்பத்தினர் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து காதலருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தனக்கு வேறு வழி இன்றி நாலாநல்லூரில் உள்ள காதலன் வீட்டு முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதற்காக போகிறேன் என்றும் கண்ணீரும், கம்பலையுமாக கூறி னார்.

இதனையடுத்து சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒன்றியக்குழு துணைத்தலைவி வனிதா தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, பவித்ராவை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

Next Story