தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2020 11:00 PM GMT (Updated: 25 Aug 2020 6:50 PM GMT)

தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி,
 
தூத்துக்குடியில் கூட்டுறவு பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி 7-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார். காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் மற்றும் முககவசங்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க அம்மா உணவகம், மருந்து கிடைக்க அம்மா மருந்தகம், காய்கறிகள் கிடைக்க பண்ணை பசுமை காய்கறி கடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதன்படி தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட பண்ணை பசுமை காய்கறி கடை 7-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதுவரை ரூ.36.05 கோடிக்கு விற்பனை நடந்து உள்ளது. தமிழக அளவில் தொடர்ந்து முதல் இடம் பெற்று விளங்குகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மூலம் விவசாயிகளிடம் நேரடியாக காய்கறி கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபமும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறியும் கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ரமணிதேவி, கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் சுப்புராஜ், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியர் அந்தோணி பட்டுராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர்் கோபி(எ)அழகிரி, மற்றும் ஜவகர், கே.ஏ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story