ஊரடங்கு நாட்களில் சுபநிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை


ஊரடங்கு நாட்களில் சுபநிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2020 10:00 PM GMT (Updated: 29 Aug 2020 3:47 AM GMT)

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர், 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு 31-ந்தேதி வரை அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு நாட்களில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமம், நகர பகுதிகளில் நடக்கும் திருமணங்கள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் அதிகளவு பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்பு முகக் கவசம், கிருமி நாசினி பயன்படுத்துவதில்லை எனச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவ காரணமாக அமையும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு நாட்களில் அரசு அனுமதியுடன் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இறப்பு இறுதி ஊர்வலம் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story