இன்று முழு ஊரடங்கு: நெல்லை காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது


இன்று முழு ஊரடங்கு: நெல்லை காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 29 Aug 2020 10:00 PM GMT (Updated: 29 Aug 2020 7:23 PM GMT)

நெல்லையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வில்லாத முழு ஊரடங்கையொட்டி காய்கறி கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கில் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடியில் சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு அதிகமாக வாகனங்கள் செல்கின்றன. 7 முறை ஊரடங்கு அறிவிக்கும்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மாதத்தில் இன்று 5-வது ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மக்கள் கூடுலாக வாங்கி சென்றனர். பாளையங்கோட்டை தற்காலிக மார்க்கெட்டில் வழக் கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது

பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் பொதுமக்கள் போட்டி, போட்டி காய்கறிகளை வாங்கிச் சென்றனர். நெல்லை டவுன் ரதவீதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் கூட்டம் அலை மோதியது. சில நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூட வேண்டும். பொதுமக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும். அவசர தேவையிருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். இதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story