கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா தனிமை குறித்து உருக்கம்


கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா தனிமை குறித்து உருக்கம்
x
தினத்தந்தி 30 Aug 2020 12:20 AM GMT (Updated: 30 Aug 2020 12:20 AM GMT)

நடிகை ஜெனிலியா கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளார். தனிமையில் இருந்தது குறித்து அவர் உருக்கமாக கூறினார்.

மும்பை,

நாட்டையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள், பிரபலங்களை விட்டுவைக்கவில்லை. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நடிகர் அமிதாப்பச்சன் போன்றவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நடிகை ஜெனிலியா கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில்:-

கடந்த 3 வாரங்களுக்கு முன் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் அருளால் இன்று எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

எனினும் கடந்த 21 நாட்களாக தனிமையில் இருந்தது சவாலானதாக இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும். வீடியோகால், டிஜிட்டல் உலகம் தனிமையின் கோர முகத்தை தடுத்துவிடமுடியாது. எனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் இருங்கள். இதுதான் ஒருவருக்கு தேவையான உண்மையான பலம். விரைவாக சோதனை செய்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, திடமாக இருப்பதே இந்த பேயை எதிர்த்து போராட ஒரே வழி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை ஜெனிலியா தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியன், பாய்ஸ், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

Next Story