பா.ஜ.க.வின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.க. கனிமொழி எம்.பி. பேச்சு


பா.ஜ.க.வின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.க. கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 30 Aug 2020 11:00 PM GMT (Updated: 30 Aug 2020 6:21 PM GMT)

பா.ஜ.க.வின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.க. என்று கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. பேசினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நகர தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

மத்திய பா.ஜ.க அரசு இன்னும் எத்தனையோ ஆண்டுகள் கழித்து நிறைவேற்றுவேன் என்று சொல்லக்கூடிய ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றி காட்டிய மாநிலம் தமிழகம். அதை செய்து காண்பித்தவர் கருணாநிதி. தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் உயர்கல்விக்கான அத்தனை திட்டங்களும் வகுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளதாக மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்தார். ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மின்சாரம் வசதியே இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் கருணாநிதி. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் நடக்கக்கூடிய தவறுகளை எல்லாம் தாண்டி, இன்றைக்கும் குஜராத், உ.பி.யை விட தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, மாநிலத்தின் கல்வி வளர்ச்சி, தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது இவையெல்லாம் நாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கொரோனா காலகட்டத்தில் கூட முகக்கவசம், சாலை அமைத்தது, மருத்துவ உபகரணங்கள் வாங்கியது வரை எந்த அளவுக்கு ஊழல்கள், தவறுகள் நடைபெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா மரணங்களில் கூட பொய் சொல்லப்பட்டிருக்கிறது. மூடி மறைக்கப்பட்டு இருக்கிறது. இதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். அவர் கேட்டு இருக்கக்கூடிய எந்தக் கேள்விக்கும் சரியான பதில் கிடையாது.

வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தல் பணி என்பது எப்படி இருக்க வேண்டும்? என்று தெளிவான அறிவுரையை ஸ்டாலின் வழங்குவார். தி.மு.க.வினர் அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும். பா.ஜ.க. தலைவராக இருக்கக் கூடிய நட்டா, தி.மு.க.வை தான் குறி வைத்து பேசி தாக்கிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வின் மக்கள் விரோத திட்டங்களையெல்லாம் எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். இணையதளத்தில் பா.ஜ.க.வினர் இயங்கக்கூடிய செயல்பாடு என்பது ஒரு பெரிய கார்பரேட் நிறுவனம் போன்று சோசியல் மீடியாக்களை நடத்தி கொண்டிருக்கின்றனர். எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். இதையெல்லாம் எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர் முருகேசன், தி.மு.க. நிர்வாகி ராமானுஜம் கணேசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story