செப்டம்பர் 15-ந் தேதிக்கு பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு 2 மடங்காகும் - கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை


செப்டம்பர் 15-ந் தேதிக்கு பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு 2 மடங்காகும் - கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2020 12:33 AM GMT (Updated: 31 Aug 2020 12:33 AM GMT)

செப்டம்பர் 15-ந் தேதிக்குபிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு 2 மடங்காகி விடும் என்று கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலர் தலைமறைவாகி விடுவதாக மருத்துவர்கள் மூலம் புகார்கள் வந்துள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மதுக்கடைக்கு சென்று மதுகுடித்து விட்டு மாலையில் தனியாக வார்டுக்கு வந்துள்ளார். இந்த சூழலை எவ்வாறு கையாளுவது என்று மருத்துவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா சிகிச்சையில் இருக்கும் போது மதுகுடித்து விட்டு வருவோரின் சுயஒழுக்கம் மோசமானது.

நேற்று புதிதாக 571 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 221 ஆக உள்ளது. மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிவது, பொது இடங்களில் ஒன்று கூடாமல் இருப்பது ஆகியவற்றில் அரசின் உத்தரவை தொடர்ந்து மீறினால் செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். தற்போது இருக்கும் கொரோனா தொற்றின் பாதிப்பு 2 மடங்காகி விடும்.

புதுவையில் 90 சதவீதம் இறப்புகள் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சுகாதார நோய் உள்ளவர்களை கொரோனா பாதிக்கும் போது ஏற்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இன்னும் பல இடங்களில் கூட்டமாக கூடுகிறார்கள். எதற்காக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

சிகிச்சைக்கான செலவு அத்தியாவசிய சேவை நிதியில் இருந்தும், கடன் தொகையில் இருந்தும் செலவிடப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தான் முற்றிலும் பாதுகாப்பானது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நமக்கு பாதுகாப்பை தரும் என்பதை உணர்வது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story