புதுவையில் 32 இடங்களில் அறிவித்த உள்ளூர் ஊரடங்கு மறுபரிசீலனை செய்யப்படும் - நாராயணசாமி அறிவிப்பு


புதுவையில் 32 இடங்களில் அறிவித்த உள்ளூர் ஊரடங்கு மறுபரிசீலனை செய்யப்படும் - நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 12:37 AM GMT (Updated: 31 Aug 2020 12:37 AM GMT)

புதுவையில் 32 இடங்களில் அறிவித்த உள்ளூர் ஊரடங்கு குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 9 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள 5 ஆயிரம் பேர்களில் 2,400 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். 2,537 பேர் மருத் துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய தற்போது மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளோம். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிக படியான பரிசோதனைகள் செய்யும் போது அதிக பாதிப்புகள் தெரிகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தற்போது திருமண காலம் என்பதால் பொதுமக்கள் நெருக்கமாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் கொரோனா அதிகரிக்கிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற முடியாது. இதனை பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டு தங்கள் கடமையை செய்ய வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மத்திய மருத்துவ குழு புதுவைக்கு வந்து சென்றது. அவர்கள் அளித்த பரிந்துரையின் படி என்னென்ன ஆயத்த வேலைகள் செய்வது என்று நான் ஆலோசனை நடத்தினேன்.

அதில், ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அதை கண்டுபிடிக்க மருத்துவமனைகளில் தனியாக ஒரு பிரிவு அமைப்பது என்று முடிவு செய்துள்ளது. அது நாளை(இன்று திங்கட்கிழமை) செயல்பாட்டிற்கு வரும். இதே போல் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் பணியிடங்களுக்கு 458 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். புதுவை மாநிலத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரத்த பரிசோதனை, நுரையீரல் பரிசோதனைகளை நடமாடும் மருத்துவமனைகள் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு வீடுகளில் தனி அறைகள் உள்ளது. ஆனால் கிராம பகுதிகளில் அவ்வாறு தனி அறைகள் கிடையாது. இதன் மூலம் ஒரு வீட்டில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கி சிகிச்சை பெற தனிஅறை இல்லை என்றால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளோம்.

புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 32 இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பல பகுதிகளில் இருந்து எனக்கு புகார்கள் வந்துள்ளது. எந்த தெருவில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ளதோ அந்த தெருவை மட்டும் தனிமைபடுத்துவது நல்லது. ஆனால் அதற்காக ஒரு பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை வெளியே செல்ல விடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல. இந்த புகார்கள் வந்த உடன் நான் மாவட்ட கலெக்டரை தொலைபேசியில் அழைத்து உள்ளூர் ஊரடங்கு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எந்த தெருவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதோ அந்த தெருவை மட்டும் தனிமைபடுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

இது தொடர்பாக நாளை(இன்று) நடக்கும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஒருபகுதியை தனிமைபடுத்தினோம் என்றால் அங்கு வசிக்கும் வேலை செய்வோர், வியாபாரிகள், அரசு ஊழியர்களின் நிலை என்ன? அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் எந்த நிலைக்கு சென்று விடும் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ள தெருவை மட்டும் தனிமை படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும்.

புதுவையில் மீண்டும் ஒருமுறை வீடு வீடாக சென்ற பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் நீங்கள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் தங்களது அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இதன் மூலம் ஊரடங்கை மத்திய அரசு தற்போது ஏற்றுக்கொள்ள வில்லை என தெரிகிறது. புதுவையில் காலை 6 முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்து இருக்கும். இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம். இதே நடைமுறை வருகிற 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை மாநிலத்தில் பொதுபோக்குவரத்து சேவை எப்போது தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, ‘இதுதொடர்பாக நாளை (இன்று) நடைபெறும் பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்’ என்றார்.

Next Story