கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதம் 2 பேர் மீது வழக்கு


கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதம் 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 Sep 2020 12:40 AM GMT (Updated: 1 Sep 2020 12:40 AM GMT)

கொரோனா நிவாரணம் வழங்கவில்லை என்று கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதம் செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் சேலியமேடு பேட் மாரியம்மன் கோவில் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் வினோத் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், கொரோனா பாதித்தவரின் வீட்டை தனிமைப்படுத்தும் அடையாளமாக ரிப்பன் கட்ட வந்தனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கும் இளையபெருமாள் என்பவர், தான் மருத்துவமனையில் இருந்தபோது, எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை. இப்போது, ஏன் இந்த வீட்டில் இருப்பவரை அழைத்து செல்ல வந்துள்ளர்கள் என தகராறு செய்தார். இருப்பினும், அரசு பணியாளர்கள் அந்த வீட்டில் ரிப்பன் கட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சேலியமேடு பேட் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர், கொரோனா நோயாளிகளின் குடும்பத்திற்கு காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகள் ஏன் வழப்படவில்லை என்று தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த இளையபெருமாளும் கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வினோத் அளித்த புகாரின் பேரில், இளையபெருமாள், நாராயணன் ஆகியோர் மீது பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story