கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை


கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை
x
தினத்தந்தி 1 Sep 2020 12:59 AM GMT (Updated: 1 Sep 2020 12:59 AM GMT)

கடும் எதிர்ப்பு காரணமாக புதுவையில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக மத்திய மருத்துவக்குழு மற்றும் விஞ்ஞானிகள் குழுவும் ஆய்வு நடத்தியுள்ளது. அவர்கள் சில பரிந்துரைகளையும் அரசுக்கு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே புதுவையில் ஒரு சில இடங்களில் மட்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டது. இந்த இடங்களில் மட்டும் உள்ளூர் ஊரடங்கினை அமல்படுத்த புதுவை அரசு முடிவு செய்தது. இதன்படி புதுவை பகுதியில் 32 இடங்களில் உள்ளூர் ஊரடங்கை நேற்று முதல் வருகிற 6-ந்தேதி அமல்படுத்த கலெக்டர் அருண் உத்தரவிட்டார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மேலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகட்டைகளை அமைக்கும் பணியும் நடந்தது. முத்தியால்பேட்டையில் நடந்த பணிகளை அத்தொகுதி எம்.எல்.ஏ.வான வையாபுரி மணிகண்டன் தடுத்து நிறுத்தி, தடுப்புகளை அகற்றினார். இந்த உள்ளூர் ஊரடங்கிற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக உள்ளூர் ஊரடங்கு மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதன்படி நேற்று முதல் தொடங்குவதாக இருந்த உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. தங்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகட்டைகளை சில இடங்களில் பொதுமக்களே அகற்றிவிட்டு சென்றனர். அப்பகுதிகளில் கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கின. மக்களும் அப்பகுதியில் இருந்து வெளியே சென்று அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்கவில்லை. அறிவிப்போடு உள்ளூர் ஊரடங்கு நின்று போனது.

Next Story