சிறுமிக்கு பாலியல் சீண்டல்; வாலிபர் போக்சோவில் கைது


சிறுமிக்கு பாலியல் சீண்டல்; வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 1 Sep 2020 1:08 AM GMT (Updated: 1 Sep 2020 1:08 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெங்கப்பாக்கம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய சிறுமியை பள்ளிக்கு சென்று வரும் போது வழியில் மடக்கி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அச்சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த அந்த வாலிபர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

பாலியல் சீண்டல் சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுதவாறு கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில், மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சத்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர். சிறுமி செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு மருத்துவபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story