குமரியில் ஓணம் கொண்டாட்டம்: அத்தப்பூ கோலமிட்டும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ந்தனர்


குமரியில் ஓணம் கொண்டாட்டம்: அத்தப்பூ கோலமிட்டும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 1 Sep 2020 6:00 AM GMT (Updated: 1 Sep 2020 6:31 AM GMT)

குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் ஊஞ்சல் ஆடியும் மகிழ்ந்தனர்.

நாகர்கோவில்,

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்று. நாடு முழுவதும் உள்ள கேரள மக்களால் இந்த பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படும். இதை கேரள மக்கள் அறுவடை திருநாளாகவும் கொண்டாடுகிறார்கள்.

குமரி மாவட்டம் முன்பு கேரள மாநிலத்துடன் இணைந்து இருந்ததால் இந்த மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையை மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ஓணம் கொண்டாட்டம் நடந்தது.

குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட வீடுகளில் கடந்த 10 நாட்களும் அத்தப்பூ கோலமிடப்பட்டு இருந்தது. ஓணத்தின் உச்சமான திருவோண பண்டிகை தினமான நேற்று வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் ஊஞ்சல் ஆடியும், ஓணம் பாட்டுகள் பாடியும் கொண்டாடினர். நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஓணத்தெருவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள பிரம்ம சக்தி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதேபோல் மாவட்டம் முழுவதும் ஓணம் கொண்டாட்டம் நடந்தது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக இருப்பதால் அந்தப்பகுதிகளில் பண்டிகை கொண்டாட்டம் அதிகமாக இருந்தது.

ஓணத்தின் சிறப்பம்சமே “திருவோண சத்யா“ என்று அழைக்கப்படும் அறுசுவை விருந்து ஆகும். ஏராளமான எண்ணிக்கையில் அவியல், துவரன், பொறியல், புளிசேரி, பால் பாயாசம், அடை பாயாசம், சக்கை எனப்படும் பலாப்பழ பாயாசம் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளை தயார் செய்து தடபுடலான விருந்துகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிமாறி ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடினார்கள்.

கொரோனா தொற்று காரணமாகவும், ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் முழு ஊரடங்கு அமலில் இருந்ததாலும் கோலாகலமாக நடைபெறும் பண்டிகை இந்த ஆண்டு பெயரளவில் மட்டுமே கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், பொது நிகழ்ச்சிகள் நேற்று நடைபெறவில்லை. மக்கள் வீடுகளிலும், கோவில்களிலும் மட்டுமே அத்தப்பூ கோலமிட்டு, அறுசுவை உணவு சமைத்து உண்டு கொண்டாடினர். பொதுவாக இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.

Next Story