வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி


வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி
x
தினத்தந்தி 1 Sep 2020 10:00 PM GMT (Updated: 2 Sep 2020 1:14 AM GMT)

வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 2 பெண்கள் உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு போன்று தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அவர்களின் விவரம் வருமாறு:-

காட்பாடி காந்திநகர் இந்திராணி தெருவை சேர்ந்தவர் லட்சுமிபதி. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 78) கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மூதாட்டி உயிரிழந்தார்.

இதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த வேலுசாமி (66) என்பவர் கடந்த மாதம் 19-ந் தேதியும், ஆந்திர மாநிலம் சித்தூர் மங்கலம்குடியிருப்பை சேர்ந்த மதுசூதன் மனைவி சைதன்யா (29) கடந்த மாதம் 27-ந் தேதியும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர்.

ஆரணி அருணகிரிசத்திரம் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தயாளன் (56) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆரணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில் அவர் நேற்று இறந்துவிட்டார்.

திருவண்ணாமலையை சேர்ந்த 48 வயது நபர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மெற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை நகரை சேர்ந்த 43 வயது நபர் கடந்த 27-ந் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல 43 வயது கொண்ட மற்றொருவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. மேலும் அவருக்கு மற்ற நோய் பாதிப்பும் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் உயிரிழந்தார். முன்னதாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

இதன்மூலம் வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 7 பேரின் உடல்களும் முழுபாதுகாப்புடன் அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story