நாமக்கல் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 74 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,220 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 74 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,220 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Sep 2020 10:00 PM GMT (Updated: 2 Sep 2020 1:50 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,220 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல், 

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 2,144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,146 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று பிலிக்கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மோகனூர் அரசு பள்ளி ஆசிரியை, வரகூர் அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று நாமக்கல்லில் 12 பேர், திருச்செங்கோட்டில் 10 பேர், ராசிபுரத்தில் 7 பேர், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தலா 4 பேர் உள்பட 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,220 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 72 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 39 பேர் பலியான நிலையில், 601 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story