நெகமம் அருகே பரிதாபம்: பெண் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை


நெகமம் அருகே பரிதாபம்: பெண் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Sep 2020 6:30 AM GMT (Updated: 2 Sep 2020 5:10 AM GMT)

நெகமம் அருகே, பெண் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெகமம்,

கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த தாளக்கரை கருகல் தோட்டத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 30). இவருடைய மனைவி தாமரைச்செல்வி. இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் யாசவி என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில வருடங்களாக தாமரைச்செல்வி தைராய்டு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் முழுமையாக குணமடையாததால் மனவிரக்தியில் இருந்து உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிச்சயத்திற்கு தம்பதியினர் குழந்தையுடன் சென்று வந்தனர். இதையடுத்து மறுநாள் திருமணத்திற்கும் நேரில் செல்ல வேண்டும் என்று தாமரைச்செல்வி கணவரிடம் கேட்டு உள்ளார். ஆனால் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கூட்டம் கூடினால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் மீண்டும் செல்ல வேண்டாம் என்று கதிரேசன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக மனவிரக்தியில் இருந்த தாமரைச்செல்வி இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து தனது தாயார் கனகமணியை செல்போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் உருக்கமாக பேசி உள்ளார். முடிவில் இனிமேல் நீங்கள், எங்களை பார்க்க முடியாது என்றும், தனது தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளும்படியும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கனகமணி, தாளக் கரை அருகில் மற்றொரு ஊரில் இருக்கும் தனது மகன் கிரிதரனிடம் (24) இதுகுறித்து தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து கிரிதரன் தாளக்கரையில் உள்ள அக்காவின் வீட்டுக்கு நேரில் சென்றார். நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கூரை மீது ஏறி ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கினார். அப்போது தாமரைச்செல்வியும், குழந்தையும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தனர். இதை நேரில் பார்த்த கிரிதரன் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உருக செய்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த பின்னர், தாமரைச்செல்வியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.


Next Story