நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை


நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை
x
தினத்தந்தி 2 Sep 2020 11:26 PM GMT (Updated: 2 Sep 2020 11:26 PM GMT)

நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி சின்னத்திரை நடிகை அனிகா, அவரது கூட்டாளிகள் ரவீந்திரன், அனூப் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து இருந்தனர். அனிகாவிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னட நடிகர்கள், நடிகைகளுக்கு போதை பொருட்களை விற்றதாக தகவல்கள் வெளியானது. அனிகா கூறியது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இயக்குனர் இந்திரஜித் லங்கேசும், கன்னட திரையுலகில் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார். இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கன்னட திரைஉலகினர் போதை பொருட்களை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் இந்திரஜித் லங்கேசுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் ஆஜராகி இருந்தார். மேலும் அவர் நடிகர், நடிகைகள் போதை பொருட்களை பயன்படுத்துவது குறித்து விளக்கமும் அளித்து இருந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் போதை பொருட்களை பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர்களை போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறி இருந்தார். இதனால் நடிகர், நடிகைகள் பீதி அடைந்து இருந்தனர்.

ஆவணம் தாக்கல் செய்யவில்லை

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

நடிகர், நடிகைகள் போதை பொருட்களை பயன்படுத்துவது குறித்து புகைப்படம், வீடியோ பதிவுகள் உள்பட எந்தவித ஆவணங்களையும் இந்திரஜித் லங்கேஷ், எங்களிடம் தாக்கல் செய்யவில்லை. அவர் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் யார்-யார் என்பது குறித்த தகவலை மட்டுமே எங்களிடம் தெரிவித்தார். அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. விசாரணை முடியும் வரை எங்களால் எதுவும் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஜராக நோட்டீசு

இதற்கிடையே கன்னட நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மீண்டும் ஆஜராகும்படி இந்திரஜித் லங்கேசுக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதன்படி அவர் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகிறார்.

Next Story