ஆண்டிப்பட்டி அருகே சோகம்: ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியாததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை


ஆண்டிப்பட்டி அருகே சோகம்: ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியாததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 2 Sep 2020 10:15 PM GMT (Updated: 3 Sep 2020 3:20 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே, ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் நடத்துவது புரியாததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். அவருடைய மகன் விக்கிரபாண்டி (வயது 16). இவர், திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக விக்கிரபாண்டி சொந்த ஊரில் இருந்தார். கரட்டுப்பட்டியில் இருந்தபடியே தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் அவர் படித்து வந்தார். இந்தநிலையில் ஆன்லைன் வகுப்பு மூலம் நடத்துகிற பாடம் அவருக்கு புரியவில்லை. இதுதொடர்பாக தனது தந்தையிடம் அவர் பாடம் புரியவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அவரது தந்தை இளங்கோவன், விக்கிரபாண்டியை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்குமாறு அறிவுறுத்தினார்.

இதனால் மனமுடைந்த விக்கிரபாண்டி, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விக்கிரபாண்டி இறந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பு புரியாததால், மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story