தஞ்சையில் இருந்து மதுரை, விருதுநகருக்கு அரவைக்காக தலா 1000 டன் நெல் - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


தஞ்சையில் இருந்து மதுரை, விருதுநகருக்கு அரவைக்காக தலா 1000 டன் நெல் -  சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 4 Sep 2020 10:45 PM GMT (Updated: 5 Sep 2020 1:49 AM GMT)

தஞ்சையில் இருந்து மதுரை, விருதுநகருக்கு அரவைக்காக தலா 1,000 டன் நெல், சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இந்தநிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி, அம்மன்பேட்டை, புனல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 2 ஆயிரம் டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர். இதைத்தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் மதுரை, விருதுநகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story