சுவாமிமலை அருகே, டிரைவர் வெட்டிக்கொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


சுவாமிமலை அருகே, டிரைவர் வெட்டிக்கொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Sep 2020 10:30 PM GMT (Updated: 6 Sep 2020 12:49 AM GMT)

சுவாமிமலை அருகே டிரைவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கபிஸ்தலம், 

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள வேளாங்குடி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஹரிஹரன் (வயது23). டிரைவர். இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெளியே அழைத்து சென்றனர்.

பின்னர் அந்த நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி, கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story