திருவாரூர், நாகையில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - டெல்டாவில் 350 பேருக்கு தொற்று உறுதி


திருவாரூர், நாகையில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - டெல்டாவில் 350 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 Sep 2020 1:15 PM GMT (Updated: 9 Sep 2020 1:34 PM GMT)

திருவாரூர், நாகையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். டெல்டாவில் 350 பேருக்கு தொற்று உறுதியானது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 7 ஆயிரத்து 572 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 186 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1014 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 123 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 198 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 40 பேர் குணம் அடைந்தனர். இதனால் மாவட்டத்தில் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 659 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 841 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகி்ச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 42 பேர் குணம் அடைந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகையை சேர்ந்த 74 வயது முதியவர், 85 வயது முதியவர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

Next Story