கோட்டக்குப்பம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை 4 பேர் கைது


கோட்டக்குப்பம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2020 10:19 PM GMT (Updated: 11 Sep 2020 10:19 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வானூர்,

புதுச்சேரியையொட்டி உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் சின்னமுதலியார்சாவடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் மணவாளன் (வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது கோட்டக்குப்பம் போலீஸ் சரக பகுதியில் கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டில் நடந்த 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னமுதலியார்சாவடி பகுதியில் உள்ள கருமகாரிய கொட்டகை அருகில் மணவாளன் உடலில் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வெட்டிக்கொலை

தகவலின்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மணவாளளின் கழுத்து, கால், பின்பக்க தலை, இடுப்பு போன்ற இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதன் அடிப்படையில் அவரை யாரோ கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் மணவாளனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணை

இந்நிலையில் மணவாளனின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் புதுச்சேரி சின்னமுத்து நாடார் வீதியை சேர்ந்த ஆனந்த் (35) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே ஆனந்தை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

மணவாளன் வீட்டில் ஆனந்த் தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு தங்கியிருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக சரிவர வாடகை பணத்தை கொடுக்கவில்லை. இதனால் மணவாளன், வாடகை பணம் கேட்டு ஆனந்த் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்று அவரிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். அதற்கு வாடகை பணம் கேட்டு வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்ய வேண்டாம் என்று அடிக்கடி மணவாளனிடம் ஆனந்த் கூறி வந்துள்ளார்.

வாடகை பணம் பிரச்சினை

இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் மணவாளன் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒருமுறை குடிபோதையில் மணவாளன், ஆனந்திடம் சென்று வாடகை பணம் தரவில்லையெனில் உன்னுடைய மனைவியை நான் வைத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதுபோன்று பலமுறை மணவாளன், மதுகுடித்துவிட்டு ஆனந்திடம் பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இதனால் மணவாளன் மீது ஆனந்துக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மணவாளன் அடிக்கடி மது குடித்துவிட்டு பக்கத்து வீடுகளின் கதவையும் தட்டி அங்கிருந்தவர்களிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். இதனால் மணவாளனை கொலை செய்ய ஆனந்த் திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு ஆனந்த் தனது நண்பர்களான புதுச்சேரியை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன், சின்னமுதலியார்சாவடியை சேர்ந்த எழிலரசன் (27), சையத்கலீல் (25) ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். அதற்கு அவர்கள் 3 பேரும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு மணவாளனை ஆனந்த் உள்ளிட்ட 4 பேரும் அங்குள்ள கரும காரிய கொட்டகைக்கு அழைத்துச்சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மணவாளனை அவர்கள் 4 பேரும் சேர்ந்து கத்தி, அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 பேர் கைது

இதையடுத்து ஆனந்த், எழிலரசன், சையத்கலீல், 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட மணவாளனுக்கு திவ்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story