புதுவை காங். எம்.எல்.ஏ. ஆதரவாளர் கொலையில் கைதான 6 பேர் சிறையில் அடைப்பு 2 பேருக்கு வலைவீச்சு


புதுவை காங். எம்.எல்.ஏ. ஆதரவாளர் கொலையில் கைதான 6 பேர் சிறையில் அடைப்பு 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Sep 2020 10:52 PM GMT (Updated: 13 Sep 2020 10:52 PM GMT)

எம்.எல்.ஏ. ஆதரவாளர் கொலையில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). கதர் வாரியத்தில் துணை தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய போது வாழைக் குளத்தில் மர்ம கும்பலால் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழைக்குளம் பழனி, கிராமணி தோட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (33), அவரது தம்பி அரவிந்த் (29), வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த கட்ட செந்தில் (36), முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உதயகுமார் என்ற அஜய் (28) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 2018-ம் ஆண்டு கட்ட செந்திலின் மாமாவான ஆட்டோ டிரைவர் கூனி நாகராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

6 பேர் சிறையில் அடைப்பு

இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் இவ்வழக்கின் மேல் விசாரணையை உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மேற்கொண்டு வந்தார்.

இதனால் கணேசன் கொலையில் வெங்கடேசன் கூட்டாளிகளான குருசுக்குப்பம் தில்லை நாடார் தெருவை சேர்ந்த ஜான் (28), சின்னையாபுரம் ஆர்.கே தோட்டம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஆனந்த் (38) உள்பட 4 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதில் ஜான், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரும் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வெங்கடேஷ், அரவிந்த், கட்ட செந்தில் உள்ளிட்ட 6 பேரையும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கணேசன் கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story