மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்தது


மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 13 Sep 2020 10:00 PM GMT (Updated: 14 Sep 2020 2:48 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகினர். இதனால், சாவு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 134 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 121 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 520 பேர் ஆகும்.

இந்தநிலையில், கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி, 67 வயது முதியவர், 57 வயது ஆண் ஆகிய 3 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுடன் இணை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வயதானவர்கள் அதிகம் பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று பாதித்த 786 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 52 வயது ஆண், மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த 55 வயது ஆண் ஆகிய இருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், அரிமளம் ஒன்றியத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 202 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீடு திரும்பினர். 65 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்நிலையில் பெருங்குடி கிராமத்தை சேர்ந்த 52 பேருக்கு கொரோ னா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story