லாலாபேட்டை அருகே, கார் மீது சரக்கு வேன் மோதல்; டிரைவர் பலி - உறவினர்கள் 3 பேர் படுகாயம்


லாலாபேட்டை அருகே, கார் மீது சரக்கு வேன் மோதல்; டிரைவர் பலி - உறவினர்கள் 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:45 PM GMT (Updated: 14 Sep 2020 3:03 AM GMT)

லாலாபேட்டை அருகே கார் மீது சரக்கு வேன் மோதி விபத்தில் கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

லாலாபேட்டை,

திருச்சியை சேர்ந்தவர் மோசஸ் அமல்ராஜ் (வயது 41). இவரது அண்ணன் சார்லஸ் மனைவி ஜெசியா (35), அவரது மகள்கள் கிறிஸ்டினா ஜெனிபர், ஜெயஸ்ரீ. இவர்கள் 4 பேரும், ஒரு காரில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை மோசஸ் அமல்ராஜ் ஓட்டிவந்தார்.

அந்த கார் நேற்று மாலை கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே பெங்களூருவில் இருந்து பார்சல் ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி ஒரு சரக்கு வேனை மதுரை விளாங்குடியை சேர்ந்த ரமேஷ்பாபு (43) ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், கார் மீது மோதியது.

இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி மேசஸ் அமல்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜெசியா, கிறிஸ்டினா ஜெனிபர், ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோசஸ் அமல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவர் ரமேஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

Next Story