தேனியில் 2 மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு - 764 மாணவ-மாணவிகள் எழுதினர்


தேனியில் 2 மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு - 764 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 14 Sep 2020 5:45 AM GMT (Updated: 14 Sep 2020 6:03 AM GMT)

தேனியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் 2 மையங்களில் நடந்த ‘நீட்‘ தேர்வை 764 மாணவ- மாணவிகள் எழுதினர்.

தேனி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ‘நீட்‘ எனப்படும் தேசிய தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு பல்வேறு கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடு முழுவதும் ‘நீட்‘ தேர்வு நேற்று நடத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு 2 மையங்கள் ஒதுக் கப்பட்டன. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வை தேனியை சேர்ந்த மாணவ- மாணவிகள் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்று எழுதினர். இந்தநிலையில் இந்த ஆண்டு தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங் களில் ‘நீட்’ தேர்வு நடந்தது.

தேனி தேர்வு மையத்தில் 180 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர். அவர்களில் 130 பேர் தேர்வு எழுதினர். 50 பேர் தேர்வு எழுத வரவில்லை. முத்துத்தேவன்பட்டி தேர்வு மையத்தில் 780 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர். அவர்களில் 634 பேர் தேர்வு எழுதினர். அனுமதி பெற்றவர்களில் 146 பேர் தேர்வு எழுத வரவில்லை.

2 மையங்களிலும் மொத்தம் 960 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்த நிலையில், 764 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 196 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடந்தது. தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள், தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோரை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மாணவ-மாணவிகள் கையில் கடிகாரம் அணிந்து செல்லவும், கழுத்தில் செயின் அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. மாணவிகள் கம்மல், மூக்குத்தி, வளையல் அணிந்து செல்லவும், தலை முடியை பின்னல் போட்டுச் செல்வதற்கும், சுடிதாருக்கு துப்பட்டா அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

மாணவ-மாணவிகள் குடிநீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட், சானிடைசர், ஹால்டிக்கெட், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய 5 பொருட் களை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவ-மாணவிகள் அனைவரும் முக கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் வந்திருந்தனர்.

முத்துத்தேவன்பட்டி தேர்வு மையத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதால், அவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நுழைவு வாயிலில் இருந்து தேர்வு அறை அருகாமை வரை பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கு முன்பாக அவர்களின் ஹால்டிக்கெட் சோதனை செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் முழுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story