மண்டியா அருகே கோவிலில் நடந்த 3 பூசாரிகள் கொலை வழக்கில் 5 பேர் கைது - தப்ப முயன்ற 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


மண்டியா அருகே கோவிலில் நடந்த 3 பூசாரிகள் கொலை வழக்கில் 5 பேர் கைது - தப்ப முயன்ற 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2020 9:50 PM GMT (Updated: 14 Sep 2020 9:50 PM GMT)

மண்டியா அருகே கோவிலில் நடந்த 3 பூசாரிகள் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கற்களை வீசி போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற 3 பேர் துப்பாக்கியால் சுட்டப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மண்டியா,

கர்நாடக மாநிலம் மண்டியா (மாவட்டம்) நகரை ஒட்டி குட்டலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற அர்க்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கர்நாடக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பி கிரேடில் உள்ள இந்த கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் புகுந்து 3 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தையும், கோவிலில் இருந்த சில பூஜை பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர். முன்னதாக மர்மநபர்கள் கொள்ளையை தடுத்த ஆனந்த், கணேஷ், பிரகாஷ் ஆகிய 3 பூசாரிகளையும் கொன்றுவிட்டு, இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சம்பவம் மண்டியா மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 10 பேர் மத்தூர் தாலுகா மலவள்ளி ரோட்டில் சாடோலலு கேட் பகுதியில் பதுங்கியிருப்பதாக நேற்று காலை மண்டியா கிழக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் 10 பேரும் பதுங்கியிருந்தனர். அவர்களை கைது செய்ய போலீசார் சுற்றி வளைத்தனர்.

அந்த சமயத்தில் 10 பேரும் கற்களை தூக்கி போலீசார் மீது வீசினார்கள். மேலும் தங்களை பிடிக்க வந்த சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், 2 போலீஸ்காரர்களான கிருஷ்ணகுமார், அனில்குமார் ஆகியோரை அவர்கள் கத்தியால் தாக்கினர். மேலும் அவர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், அவர்களை சரண் அடைந்துவிடும்படி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இதைதொடர்ந்து போலீசார், துப்பாக்கியால் கொள்ளையர்களின் கால்களை நோக்கி சுட்டனர். இதில் 3 பேரின் கால்களில் குண்டு துளைத்தது. இதனால் அவர்கள் வலியால் அதே இடத்தில் சுருண்டு விழுந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 3 பேரும், கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும் சிகிச்சைக்காக மத்தூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த போலீசாரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அதன் பிறகு போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

3 பூசாரிகளை கொன்று பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 10 பேர் சாடோலலு கேட் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனால் அவர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், கத்தியால் கீறியுள்ளனர்.

மேலும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை பிடித்துள்ளனர். கைதானவர்களின் பெயர்கள், ஆந்திராவை சேர்ந்த விஜய் (வயது 30), மத்தூர் தாலுகா அரக்கல்தொட்டி கிராமத்தை சேர்ந்த காந்தி (28), மத்தூர் அருகே தொப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சு (30) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்புடைய 7 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நேற்று மாலை இந்த வழக்கில் மேலும் 2 கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் பூசாரிகளை கொன்று கொள்ளையடித்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story