ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா காவலர் உணவகம் பயன்பாட்டுக்கு வந்தது - போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தொடங்கி வைத்தார்


ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா காவலர் உணவகம் பயன்பாட்டுக்கு வந்தது - போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Sep 2020 12:14 AM GMT (Updated: 15 Sep 2020 12:14 AM GMT)

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே காவலர் உணவகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காவலர் உணவகம் (கேண்டீன்) தொடங்கப்பட்டது. போலீசார் குறைந்த கட்டணத்தில் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் சாப்பிடும் வகையில் இது தொடங்கப்பட்டது.

இங்கு போலீசாருக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கும் குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காவலர் உணவகத்தை தரமான கட்டிடத்துக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காவலர் உணவகம் புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்புவிழா சமீபத்தில் நடந்தது. ஆனால் காவலர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு இருப்பதால், புதிய காவலர் உணவகம் பயன்பாட்டுக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை நிகழ்வில் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

மேலும் உணவகத்தில் உள்ள சமையல் அறை, உணவு பரிமாறும் பகுதி, சாப்பிடும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு தொழிலாளர்கள் மற்றும் காவலர் உணவகத்தை பொறுப்பு ஏற்று நடத்தும் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார்.

அவருடன் ஈரோடு டவுன் போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசி மேரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story