வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றக்கோரி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்


வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றக்கோரி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2020 2:45 AM GMT (Updated: 15 Sep 2020 2:45 AM GMT)

வனவிலங்குகளிடம் இருந்து விவசாயத்தை காப்பாற்ற கோரி விவசாயிகள் ஒற்றை காலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா காரணமாக மக்கள் கூட்டமாக வரக்கூடாது என்பதால் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் மனுவாக எழுதி போடுவதற்காக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு வருகிறார்கள்.

நேற்று திங்கட்கிழமை என்பதால் ஏராளமான பொது மக்கள் மனுக்கள் அளிப்பதற்காக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா அங்கலகுறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், கம்மாளப்பட்டி, கோட்டூர், செம்மனாம்பதி, மாரப்ப கவுண்டன்புதூர், காளியாபுரம், அம்பராம்பாளையம், கிழவன்புதூர் ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

தென்னை விவசாயத்தில் தேங்காய் ஆரம்பநிலையான குரும்பைகளை மரநாய்களும், மரப்பூனைகளும் சேதப்படுத்துவதால் பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது. மயில்களாலும், காட்டு பன்றி தாக்குதலாலும் விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. காட்டுபன்றிகள் விவசாயிகளையும் தாக்குகிறது. வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மனு கொடுக்க வந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒற்றைக்காலில் நின்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story