நீலகிரி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம்


நீலகிரி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2020 2:52 AM GMT (Updated: 15 Sep 2020 2:52 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று மனுக்களை அளித்தனர்.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனினும் அதன் வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முதல் தொடங்கியது. வழக்கமாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். ஆனால் ஒரே இடத்தில் கூட்டம் அதிகமாக வராமல் தடுக்க அந்தந்த தாலுகா அலுவலங்களில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சமூக இடைவெளி

ஊட்டியில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மனு அளிக்க வந்த மக்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இதற்காக தரையில் கட்டங்கள் போடப்பட்டு இருந்தது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து சென்றனர். வருவாய்த்துறையினர் தொற்று பரவலை தடுக்கவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் மனுக்கள் கொடுத்து விட்டு உடனடியாக செல்லும்படி அறிவுறுத்தினர்.

சாலை பிரச்சினை

கூட்டத்தில் ஊட்டி அருகே உள்ள கரகல் மற்றும் தேனாடுகம்பையை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், தேனாடுகம்பை-சின்னகுன்னூர் சாலையை ஒட்டி உள்ள இணைப்பு சாலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் விளைநிலங்களுக்கு செல்ல மக்கள் தங்களது செலவில் சாலை அமைத்தனர். தற்போது அந்த சாலையை தனக்கு சொந்தமானது என்று கூறி அதனை ஒருவர் இரும்பு குழாய் மூலம் அடைத்து வைத்து உள்ளார். எங்களது வாகனங்களை அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு சென்று விவசாய பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக தேனாடுகம்பை போலீஸ் நிலையம் மூலம் தீர்வு காணப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஒரு நபர் பிரச்சினை செய்து வருவதால் நிலங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே மேற்கண்ட இடத்தை அளவீடு செய்து சுற்று வட்டார கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

நலத்திட்ட உதவிகள்

ஊட்டி அருகே உள்ள ரோஸ்மவுண்ட் பகுதியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், ஊரடங்கு உத்தரவால் கடந்த 7 மாதங்களாக வேலை இல்லாமலும், எந்தவித வருமானம் இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகிறோம். நாங்கள் வாழ்வாதாரம் இன்றி இருப்பதால், மகளிர் கடன் தவணையை எங்களால் தற்போது செலுத்த முடியவில்லை. கடன் தொகை தந்த அலுவலர்கள் கட்டாயமாக கட்ட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். எனவே தற்போது செலுத்த வேண்டிய கடன் தவணை காலத்தை 2 மாதத்திற்கு தள்ளி வைத்து அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 7 பேருக்கு நலத்திட்ட உதவிகள், வருவாய்த்துறை மூலம் 3 பேருக்கு தலா ரூ.1,000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Next Story