சொகுசு விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடி மோசடி: கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது - துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்


சொகுசு விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடி மோசடி: கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது - துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Sep 2020 2:15 PM GMT (Updated: 16 Sep 2020 2:20 PM GMT)

சொகுசு விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த கேரளாவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 67). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சொகுசு விடுதி கட்டி நடத்தி வந்தார். அவருக்கு வயதாகி விட்டதால் சொகுசு விடுதியை நடத்த முடியவில்லை. எனவே கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த ஷாஜகானுக்கு ரூ.4 கோடியே 35 லட்சத்துக்கு சொகுசு விடுதியை விற்பனை செய்ததாக தெரிகிறது.

அதில் ரூ.3 கோடியே 35 லட்சத்தை சிங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கி கிளையில் தனது கணக்கில் போட்டு வைத்திருந்தார். அந்த தொகையில் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சமும், லாக்கரில் இருந்து ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தையும் எடுப்பதற்கு முத்துகிருஷ்ணன் வங்கிக்கு கடந்த 2-ந் தேதி சென்றார்.

அவருடன் சொகுசு விடுதிக்கு கடந்த ஒரு வருடமாக வந்து செல்லும் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அனுப்குமார் சென்றுள்ளார். வங்கியில் பணத்தை எடுத்து விட்டு திரும்பும்போது இரவாகிவிட்டதால் அனுப்குமார் ரூ.1 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரத்தை மறுநாள் 3-ந் தேதி காலையில் கொண்டு கொடுப்பதாக கூறினார். அவர் ஒப்புக்கொண்டதால், முத்து கிருஷ்ணனை சொகுசு விடுதியில் இறக்கி விட்டு அனுப்குமார், கார் டிரைவர் மற்றும் வேறு ஒருவருடன் சென்று விட்டார்.

ஆனால் மறுநாள் அவர் பணத்தை கொண்டு வந்து கொடுக்கவில்லை. இதனால் முத்துகிருஷ்ணன் தொடர்பு கொண்டபோது அனுப்குமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த மோசடி குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கள் கருப்பசாமிபாண்டியன், கவியரசு மற்றும் போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் ஆனைமலை அருகே கோவிந்தாபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதில் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் கேரளா மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த சதீஷ் (30), மலப்புரத்தை சேர்ந்த சின்ஜித் (24), எர்ணாகுளத்தை சேர்ந்த மனோஜ் (30), பிலால் (25), காசர்கோட்டை சேர்ந்த சசிகாந்த் (25) என்பதும், முத்துகிருஷ்ணனிடம் ரூ.1¾ கோடி செய்த வழக்கில் தொடர்பு டையவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் 5 கத்திகள், ஒரு துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

முத்துகிருஷ்ணன் நடத்தி வந்த விடுதிக்கு அனுப்குமார் அடிக்கடி வந்ததால், இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த அடிப்படையில்தான் வங்கியில் இருந்து எடுத்த பணத்தை அனுப்குமாரிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அவர் முத்துகிருஷ்ணனை ஏமாற்றி மோசடி செய்து உள்ளார். அவர் மீது கேரளாவில் 12 வழக்குகள் இருப்பதும், பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

அவர் அதிகளவில் பணம் வைத்து உள்ளவர்களை குறிவைத்து பழகி, துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் பணத்தை பறித்து உள்ளார். எனவே தலைமறைவாக இருக்கும் அனுப்குமாரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story