அரசு கல்வி நிறுவன மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


அரசு கல்வி நிறுவன மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 Sep 2020 10:15 PM GMT (Updated: 16 Sep 2020 6:56 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவன மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

தூத்துக்குடி,

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஓதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

2020-21-ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்லூரிகளிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்களை 10.11.2020-க்குள்ளும், புதிதாக பெறுபவர்கள் 30.11.2020-க் குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 15.12.2020-ம் தேதிக்கு முன்பும், புதிதாக உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை 31.01.2021-ம் தேதிக்கு முன்பும், அந்தந்த கல்லூரி நிறுவனங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். அரசு இணையதளமான www.tn.gov.in/bcmbcdept மூலம் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story