நெல்லை மண்டலத்தில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை - போக்குவரத்து கழக அதிகாரி தகவல்


நெல்லை மண்டலத்தில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை - போக்குவரத்து கழக அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 Sep 2020 10:45 PM GMT (Updated: 16 Sep 2020 7:29 PM GMT)

நெல்லை மண்டலத்தில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

நெல்லை,

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், பாபநாசம், சேரன்மாதேவி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி, ராஜபாளையம், சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

பஸ்களில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து உட்காரவேண்டும் கையுறை அணிந்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்களில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய ஊர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நெல்லை மண்டலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இதுவரை 600 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எந்த வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணமாக குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்கு கூடுதலாக பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் எந்த ஊருக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது .அந்த ஊருக்கு பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாவட்டத்தில் தனியார் பஸ்களும் நேற்று முதல் ஓடத் தொடங்கின. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 174 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் 20 சதவீத பஸ்கள் ஓடத்தொடங்கி உள்ளது. உள்ளூர் டவுன் பஸ்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story