அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை


அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
x
தினத்தந்தி 17 Sep 2020 1:30 AM GMT (Updated: 17 Sep 2020 1:30 AM GMT)

அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் உயிர் மீட்பு செயல்முறை விளக்கம் நடைபெற்றது. கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் விபத்து மீட்பு பணி செயல்முறை விளக்கத்தில் வெடி விபத்துக்கள் ஏற்படும் பொழுது செய்யப்பட வேண்டிய முதலுதவி, மனித உயிர்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்திலிருந்தும், நில அதிர்வுகளில் ஏற்படும் விபத்துகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் அவர்களை காப்பாற்றும் முறையான கயிறு வழி மீட்டல், ஏணி வழி மீட்டல் மற்றும் புகை சூழ்ந்த அறையில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டல் போன்ற செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தீ விபத்து

வாகன விபத்துக்களில் மாட்டிக்கொண்டவர்கள் மற்றும் கட்டிட விபத்துகளில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளான கட்டர், ஸ்பீரிட்டர், ஏர் லிப்ட்டிங் மூலமும், குடிசை பகுதிகளில் ஏற்படுகின்ற தீ விபத்துகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்படுகின்ற தீ விபத்துகளின் போதும் தீயணைக்கும் முறையினை பற்றியும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், பயிற்சி கலெக்டர் அமித், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மனோகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோபிரசன்னா, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் கண்ணன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story