நாமக்கல்லில் லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு மீட்க வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு


நாமக்கல்லில் லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு மீட்க வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Sep 2020 3:01 AM GMT (Updated: 17 Sep 2020 3:01 AM GMT)

நாமக்கல்லில் லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரை மீட்க வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 38). விவசாயி. இவர் நேற்று காலை நாமக்கல்லில் உள்ள பரமத்தி சாலையில் பஸ்நிலையம் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார்.

தனியார் வங்கி ஒன்றின் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கவேல் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கி கொண்ட தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதேபோல் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த கோகுல்நாத் என்பவரும் காயம் அடைந்தார்.

ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 2 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை நோக்கி சென்றன. இதில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தானியங்கி மின்தடை பதிவு செய்யும் அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் மோதியது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் அந்த ஆம்புலன்சை ஓட்டி சென்ற சரத் என்ற வாலிபர் லேசான காயம் அடைந்தார். கோகுல்நாத், சரத் ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story