சேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


சேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Sep 2020 4:11 AM GMT (Updated: 17 Sep 2020 4:11 AM GMT)

சேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் சதீஷ் ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ.916 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 77 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சூரமங்கலம் மண்டலம் பள்ளப்பட்டி ஏரியை ரூ.29 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தி, பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளப்பட்டி ஏரியினை மேம்படுத்தி, பல்வேறு அம்சங்கள் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 44.76 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.29 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொழுதுபோக்கு பூங்கா

அதனடிப்படையில், ஏரியின் கரைகளை பலப்படுத்தி, ஏரிக்குள் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள், படகு இல்லம், சூரிய மின்சக்தி உற்பத்தி தகடுகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், குழந்தைகளை கவரும் வண்ணம் செயற்கை நீரூற்றுகள், விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகரணங்களை கொண்ட விளையாட்டு பூங்கா அமைத்தல் மற்றும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக நடைமேடை, மிதி வண்டி ஓட்டும் தளம், உணவகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு, நவீன சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story