மாவட்டத்தில் 263 பேருக்கு பாதிப்பு உறுதி: கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி - ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


மாவட்டத்தில் 263 பேருக்கு பாதிப்பு உறுதி: கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி - ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 17 Sep 2020 3:45 PM GMT (Updated: 17 Sep 2020 3:35 PM GMT)

மாவட்டத்தில் 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16 ஆயிரத்து 826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 263 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் நாக்பூரில் இருந்து என்.எல்.சி. வந்த ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரை சேர்ந்த நோயாளி, குமராட்சி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 3 கர்ப்பிணிகள், நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 104 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 156 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 89 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் வரை 174 பேர் பலியாகி இருந்தனர். நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 55 வயது ஆண், கடலூரை சேர்ந்த 63 வயது முதியவரும் கடலூர் அரசு மருத்துவமனையிலும், புவனகிரியை சேர்ந்த 81 வயது முதியவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சிதம்பரத்தை சேர்ந்த 43 வயது பெண் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 178 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 2,554 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Next Story