ஊத்தங்கரை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஊத்தங்கரை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Sep 2020 3:08 AM GMT (Updated: 18 Sep 2020 3:08 AM GMT)

ஊத்தங்கரை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்.

ஊத்தங்கரை,

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நல்லம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கீரனூரை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் கவிதாவுக்கும் (வயது 25) கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்களுக்கு தனலட்சுமி என்ற 4 வயது மகள் இருக்கிறாள்.

சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் மது குடித்துவிட்டு வந்து சுப்பிரமணி மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் சுப்பிரமணி குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் சுப்பிரமணிக்கும் மனைவி கவிதாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கவிதாவின் தாய் காசியம்மாளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நல்லம்பட்டிபுதூர் வந்த காசியம்மாள், மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் கவிதா சாவில் சந்தேகம் உள்ளதாக சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து உடலை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story