சினிமா படபாணியில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி நூதன முறையில் பண மோசடி - 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது


சினிமா படபாணியில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி நூதன முறையில் பண மோசடி - 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sep 2020 12:27 AM GMT (Updated: 19 Sep 2020 12:27 AM GMT)

சினிமா படபாணியில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பண மோசடி செய்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்தவர் கருப்பையா. தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி இவரது செல்போனில் பேசிய இளம்பெண் ஒருவர், குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.

அப்போது பண கஷ்டத்தில் இருந்த கருப்பையா, கடன் பெற சம்மதித்தார். இதையடுத்து கடன் பெறுவதற்கான படிவத்தை ஆன்லைன் மூலம் அனுப்பிய பெண், அதனுடன் ஆதார், டெபிட், பான் கார்டு, வங்கி கணக்கில் உள்ள இருப்பு ஆகியவற்றை கருப்பையாவிடம் வாட்ஸ் அப் மூலம் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் கடன் தொகையை வங்கி கணக்கில் அனுப்புவதற்கு செல்போனில் வந்துள்ள ரகசிய குறியீட்டு 6 இலக்க எண்ணை தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார். கருப்பையாவும் ரகசிய குறியீட்டு எண்ணை கூறினார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையாவின் வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையா, இந்த மோசடி குறித்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமனிடம் புகார் செய்தார். இதையடுத்து அடையாறு சைபர் கிரைம் போலீசாருடன் துரைப்பாக்கம் போலீசாரும் இணைந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இளம்பெண் பேசிய செல்போன் எண் போலியான ஆவணங்கள் கொடுத்து வாங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த செல்போன் எண்கள் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அடையாறு தனிப்படை போலீசார் குமாரப்பாளையம் சென்று விசாரித்தனர்.

அதில் ஈரோடு மாவட்டம், கருங்காளிபாளையத்தை சேர்ந்த குமரேசன் (வயது 28) என்பவர் கடந்த 6 மாதங்களாக போலியாக கால் சென்டர் நடத்தி வருவது தெரியவந்தது.

இவர், கடன் பெற விண்ணப்பித்து இருப்பவர்கள் விவரங்களை இணையதளம் மூலமாக எடுத்து தன்னிடம் வேலை செய்யும் பெண்களை வைத்து அந்த அப்பாவி மக்களிடம் குறைந்த வட்டியில் வங்கி கடன் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர்களின் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எடுத்தது தெரியவந்தது. இதுபோல் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் பண மோசடி செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குமரேசன் 2016-ம் ஆண்டு பிரபல தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்த வழக்கில் சிறை சென்று உள்ளார். வேலூரில் வங்கி மோசடி தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து குமரேசனை கைது செய்த போலீசார், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த குமாரபாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் (41), காயத்திரி(20), ரஞ்சிதா(25), சுபத்ரா(21) ஆகியோரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 9 செல்போன்கள், 3 தொலைபேசிகள், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 3 பெண்கள் உள்பட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை சினிமா படபாணியில் ஆவணங்கள் மூலம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடித்த அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் தலைமையிலான தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், தென்சென்னை இணை கமிஷனர் பாபு ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story