போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் ஒத்திவைப்பு - பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு


போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் ஒத்திவைப்பு - பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Sep 2020 11:15 PM GMT (Updated: 19 Sep 2020 10:01 PM GMT)

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் ஒத்திவைத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கன்னட திரை உலகில் முன்னணி நடிகைகளாக இருந்து வரும் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அவர்கள் 2 பேரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரும் ஒரே அறையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அந்த விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதுபோல, நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டு நீதிபதி சீனப்பா முன்னிலையில் நேற்று நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரா ஆஜரானார். அவர், நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க ஒரு வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு நடிகைகளின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். குறிப்பாக சஞ்சனா கல்ராணி மீது பதிவான சட்டப்பிரிவு குறித்து கோர்ட்டில் இதுவரை போலீசார் தெரிவிக்காத காரணத்தால், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று வக்கீல் கூறினார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க அரசு வக்கீலுக்கு 2 நாட்கள் காலஅவகாசம் வழங்கினார். மேலும் அந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு (அதாவது நாளை) ஒத்திவைத்து நீதிபதி சீனப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே 3 முறை 2 நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மேலும் 2 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story