புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 20 Sep 2020 2:29 AM GMT (Updated: 20 Sep 2020 2:29 AM GMT)

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

இந்துக்களில் பெரும்பாலானோர் புரட்டாசி மாதம் விரதம் இருப்பது வழக்கம். இந்த மாதத்தில் குறிப்பாக அசைவ உணவுகளையும் தவிர்ப்பர். புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அன்று வீடுகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம் என்பதும், பொருளாதார பிரச்சினைகள் தீருவதோடு, துன்பங்களும் பறந்தோடும் என்பதும் மக்களின் ஐதீகம்.

நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. தஞ்சை வெண்ணாற்றங்கரையில் வீரநரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இது தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும்.

சிறப்பு அலங்காரம்

இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சை நாலுகால் மண்டபத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றுவிழா நேற்று நடந்தது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முக கவசம் கட்டாயம்

இதேபோல் கொண்டிராஜபாளையத்தில் உள்ள யோகநரசிம்மர் கோவில், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள் கோவில், கீழவீதி வரதராஜபெருமாள் கோவில், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. முக கவசம் அணியாதவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் தேங்காய், பழங்கள், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களையும் பக்தர்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. சமூக இடைவெளியுடன் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விண்ணமங்கலம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வெண்ணையுண்டபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Next Story